09 பிப்ரவரி, 2012

படம் பார்த்து கவ்ஜையை கக்கு

#KAVI16 கவிதை ப்ளீஸ்  on Twitpic


உன் வயிற்றில் கருத்தரிக்கவில்லை இந்த உயிர் 
ஆனாலும் நீயும் நானும் ஒரே ஜாதி அம்மா என்று அழைப்பதால்

என் தாயின் கொங்கை தவிர்த்து நானறியேன்  
இவ் உலகில் உன் போல் பசிதீர்க்கும் பாத்திரமே

கணநேரம் மடியில் வைத்து என் பசி போக்கினாள் என் அன்னை
இன்றூ உன் மடி தேடி வந்தேன் அநாதை கன்றுகுட்டியாய்

உன் மொழிகள் நானறியேன்,உன் இனத்தை நானறியேன்.
உன் மடி கண்டு அதன் பால் உண்டு நானறிந்தேன் நீயும் தாயென்று..


ஆறறிவென்றார் எமக்கு ,அதில் ஓரு அறிவு குறைவு உனக்கு,
எனைத்தெருவில் விட்டுபோனோர் இனி எதற்கு நீதான் தாயே என குலவிளக்கு


கோமாதவென்று உனை அழைப்பர் கோயில் சென்று அன்னதானம் கொடுப்பர்,
ஆனால் உனையும் எனையும் எச்சில் உண்ணவே மிச்ச இலையை கொடுப்பர்

#KAVI15 கவிதை ப்ளீஸ் on Twitpic


என் பசிக்கு ரத்தம் காய்ச்சி பால் கொடுத்தாள் என் தாய்
அவளின் பசி போக்க ரத்தம் சக்தியாக்கி சுமை தூக்குகிறேன்

விழியோரம் விம்பமாகும் உன் சோகமும்
கைகளின் வீரிய ரெளத்திரமும்  
நீயும் திறந்தவெளிச்சிறை தமிழனின் விதையா

கால்களில் தூரமும் கைகளில் பாரமும் தெரியவில்லை தாயே
கண்ணீரும் வற்றிய உன் கண்கள் என்னுள் காட்சியாகும் போது

பென்சில் பிடிக்கவேண்டிய என் கைகளில் 
பெற்றிடுத்த பெண்மையின் இலக்கணமே
உனக்கு உணவளிக்க கல் சுமக்கிறேன்

நீ பசித்திருந்து  எனை வெளிக்கொணர்ந்து
தொப்புகொடி அறுத்தாய்
படுக்கையில் உன் நிலை உணர்ந்து
என் கல்வி தொலைத்து 
காலம் முழுக்க கூலியானேன்

21 ஜனவரி, 2012

முத்திரை வெளியீடும் முள்ளிவாய்க்கால் நினைவுகளும்

சென்றவாரம் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு போயிருந்தேன் யாழ்ப்பாண வீட்டில பொங்கல் கொண்டாடலாம் எண்டு.. நான் ஊருக்கு போனாலே நம்ம பெரியம்மாவுக்கு சந்தோசம் களை கட்டிடும்.தன்னந்தனியாகவே வீட்டிலேயே இருப்பதால் நான் போனால் வீட்டுக்கு கூட்டிப்போய்  ஊர்ப்புதினம் எல்லாம் கேட்பா, முக்கியமா நம்ம நாட்டு அரசியலை ஒரு குடை குடைவார். அப்படித்தான் இந்தமுறையும் நான் மாட்டுப்பட்டேன்...

தம்பி பார்த்தியா பிரான்ஸ்ல பிரபாகரனோட முத்திரை வெளியிட்டிருக்காங்களாம்.லண்டனில புலி சீல் முத்திரை வெளியிட்டிருக்காங்களாம், ராஜபக்சேவுக்கு ஒரே பிறசராமே இப்போ...


இதெல்லாம் யார் பெரியம்மா சொன்னது உங்களுக்கு

உதயன் பேப்பரில போட்டிருந்தாங்க..அதோட பக்கதில பஞ்சாட்சரமும் சொன்னார் கோயில்ல எல்லாச்சனமும் கதைச்சாங்களாம் எண்டு..''

இல்லை பெரியம்மா முத்திரை விசயம் கொஞ்சம் சீரியசும் சிக்கலான விசயம்தான்..
Add caption
ஏண்டா லண்டன் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதி கொடுத்திட்டாங்களாமே..அப்போ இலங்கை அரசாங்கம் ஒண்ணுமே செய்யேலாது தானே..

இல்ல பெரியம்மா அரசாங்கம் அறீவிச்சிருக்கு அந்த முத்திரை எல்லாம் ஒட்டி இலங்கைக்கு லெட்டர் போடவேண்டாம் அனுப்பினா நாங்கள் அதை கவனிக்கமாட்டோமெண்டு..

சரி அதை விடு ஏன் இப்ப முத்திரை வெளியிட்டிருக்காங்க..

Add caption
இப்போ  எல்லா நாடும் புலிகளை பயங்கரவாத பட்டியலில வைச்சிருக்கு,இப்படி ஏதாச்சும் முத்திரைகளை வெளிநாடுகளில் அனைத்து அனுமதிகளையும் எடுத்து வெளியிட்டால் அது புலிகளை  பயங்கரவாதச்சட்டத்தில இருந்து நீக்கிறதுக்கு ஒரு துருப்புச்சீட்டா பயன்படுத்தலாம் அதோட தமிழ் மக்களோட போராட்டம் நியாயமானது என்பதை உலகளாவிய ரீதியில் உணரவைக்கணும் அதுக்காகத்தான் ..  

Add caption
அப்படா இந்த முத்திரை வெளியிட்டா எப்படியும் தலைவரை வெளில கொண்டுவரலாம் எண்டு சொல்லுறாங்கள்..

சரி தலைவர் வெளில வந்து என்ன செய்யப்போறார்...
இப்ப எல்லா நாட்டில இருந்தும் வந்து புனர்வாழ்வில இருந்து வெளில வந்த இயக்க பெடியள் பெட்டையளை சந்திச்சு கதைச்சு இருக்காங்களாம்.. ஆயுதம் எல்லாம் வாங்க இப்ப காசு சேர்க்கிறாங்களாம், 

அது கோத்தபாய அவிழ்த்துவிட்ட கதை பெரியம்மம,அபப்டி சொன்னால்தானே புனர்வாழ்வில இருக்கிறவங்களை வெளில வரவிடாம தடுக்க சொன்ன கதை இது.இதெல்லாம் யார் பெரியம்மா உங்களுக்கு சொன்னது

கோயில்ல கதைச்சாங்களடா..

அப்ப கோயிலுக்கு கும்பிட போறேல்லையா பெரியம்மா,சரி ஒரு கதைக்கு கேட்கிறன், திரும்பி ஒருக்கா சண்டை தொடங்கினா நீங்க என்ன செய்வீங்க, உங்கட மகனோட பிள்ளைகளை வெளிநாட்டில இருந்து வந்து சண்டை பிடிக்க விடுவீங்களா பெரியம்மா..

டேய் என்னடா கதைக்கிறே.

பின்ன என்ன பெரியம்மா.. நீங்க ஆரம்பத்தில போராட்டுத்துக்கு ஆதரிச்சிருக்கலாம்.. ஆனா இறுதிக்கட்டத்தில வன்னிச்சனம் பட்ட துன்பத்தை போல யாருமே பட்டிருக்க ஏலாது. இனி எந்த சனமும் போராட்டத்துக்கும் ஆதரவு கொடுக்காது அந்தளவு வேதனைகளையும் சோதனைகளையும் சந்திச்சிட்டாங்க, மெனிக்பாம் முகாமில ஒரு நாள் வந்து பார்த்திருந்த தெரிஞ்சிருக்கும,அதோட யாழ்ப்பாணத்தில இருக்கிற பொடியன்கள் பெட்டையள் எல்லாம் நல்லா வசதியா வாழ பழகிட்டுதுகள்,அதுகள் எல்லாம் இனிமேல் துப்பாக்கி மட்டுமல்ல.. ஒரு சுலோக அட்டை எடுத்துக்கொண்டு கூட அமைதி போராட்டம் போராட முன் வரமாட்டாங்கல்,உங்களைப்போல பெரியவங்கதான்  போராட ரோட்டில இறங்கணும் நீங்க ரெடியா ..

டேய் பேப்பரிலயும் போட்டிருக்காங்களாம்.. திரும்ப சண்டை வரப்போகுதெண்டு.. பிரபாகரன் திரும்ப வருவார் எண்டு..


நிற்க****************


எனது பெரியம்மா மட்டுமல்ல இன்று பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் எண்ண ஓட்டங்களும் இதுதான்..

1) திரும்ப இயக்கம் வரப்போகுது சண்டை தொடங்கப்போகுது
2) தலைவர்  பிரபாகாரன் தப்பிப்போய் பாதுகாப்பா இருக்கிறார் ,நேரம் சரியா வாறப்ப தலைவர்  திரும்ப வருவார்...

முதலாவது விடயத்தை விட்டுவிடுவோம் இரண்டாவது விடயத்துக்கு வருவோம்.

1985 இல இருந்து போராட்டத்துடன் ஊறீப்போன குடும்பத்தில் நானும் பிள்ளையாக இருந்ததால் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்திச்சு...அதன்பின்பு  2006 இல் இருந்து இறுதி யுத்தம் வரை வன்னியிலேயே வாழ்ந்த போது போராட்டத்தை என் ரத்தத்தில் கரைந்து ஊறியிருந்த ஒரே காரணத்தினால் இந்த பதிவு ,பலர் சண்டைக்கு வரலாம்,பலர் திட்டலாம்,ஆனால் உண்மைகளை அவர்கள் உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதே என் கருத்து.

2007 ம் ஆண்டுகாலப்பகுதியில் " 300 " என்ற ஸ்பார்டர்ஸ் என்ற விடுதலை போராட்ட வீரர்கள் பற்றீய ஒருதிரைப்படம் வந்திருந்தது.அந்த படம் வன்னி மண்ணிலும் தமிழீழ திரைப்படத்துறையினரால் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டது.தமீழீழ திரைப்படத்துறையினர் எப்போதும் பெருமிதம் கொள்வது என்னவெனில் தலைவர் அவர்களை ஒரு இடத்தில் உட்கார்த்தி வைத்து தமது தமிழாக்க திரைப்படங்களை அவருக்கு திரையிட்டு காண்பிக்கும் வரம்தான்.2 மணித்தியாலங்கள் அமர்ந்திருந்து பார்த்துவிட்டு தனது விமர்சங்களை சொல்லிவிட்டு போவாரம் தலைவர்.அதேபோல் இந்த 300 படத்தை தலைவர் அவர்கள் பார்த்து விட்டு சொன்னார்



"இந்த படத்தை வன்னியின் மூலைமுடுக்கெல்லாம் திரையிடுங்கள்,அனைத்து தமிழ் மக்களும் பார்க்கணும்,அந்த ஸ்பாக்டரன் வீரர்கள் போல எம் மக்களின் உணர்வுகளும் இறுதி வரை இருக்கவேண்டும்"

அடுத்ததாக 2009 இன் ஆரம்ப நாட்களில் போர் உச்சக்கட்டம் பெற்றிருந்தபோது  புதுக்குடியிருப்பில்  ஒரு இடத்தில்  அனைத்து தளபதிகளுடன் போர் சம்மந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது தலைவர் அவர்கள் அனைத்து தளபதிகளிடம் சொன்னது ,

"நீங்கள் எல்லாரும் 300 படம் பார்த்திருப்பீங்க.. அதேபோலத்தான் நம்மோட இந்த போராட்டமும் இப்ப இருக்கு. உலக அரக்கர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறம்.எங்கட சண்டை டீமில் 50 பேர் இருந்தா அதில 30 பேர் கட்டாய ஆள்சேர்ப்பில வந்த பெடியளும் பிள்ளையுளும்.. அவங்க எப்போ வீட்டுக்கு போவம் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர முன்னால வார எதிரியை அவங்க வீட்டுக்கு அனுப்பவேணுமெண்டு நினைக்கினமில்லை. அந்த 300 படம் மாதிரி நாங்களும் சுகந்திர உணர்வுள்ள அனைவரும் இந்த போராட்டத்தோட ஒரு கட்டத்தில மக்கள் இல்லாத ஒரு இடத்தில ஒன்றூ கூடி எதிரியோட சண்டை பிடிக்கோணும்.சனத்துக்கு இழப்பு வரக்கூடாது என்ன எல்லாருக்கும் புரியுதுதானே"

ஆனால் இதனை தலைவர் இறுதி நாட்களில் செயல்படுத்துவதற்காய் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரத்திலே அனைத்து தளபதிகளுடனும் பாரிய இறுதி யுத்ததுக்காக ஒன்றுகூடியிருந்தபோது அனைத்துமே கைமீறி போனது.
அந்த இடத்தில் தலைவர் அவர்களை பாதுகாக்கவும் எதிரியை பின்நோக்கி நகர்த்தவும் அனைத்து தளபதிகளும் போராளிகளும் எதிரியுடன் முன்னரங்குநிலைகளிலேயே மூர்க்கமாக போராடினார்கள்.மூன்று தடவைக்கு மேல் பலமாக காயப்பட்டு இருந்த தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களையும் மற்றைய தளபதிகளையும் மீட்பதற்காய் வெளிப்பகுதியிலிருந்து பொக்ஸ் அடித்து நின்ற ராணூவத்தினர் மீது மூர்க்கமான தாக்குதல் நடத்தப்பட்டபோது பிரிகேடியர் தீபன் அவர்கள் சொன்னது

"நான் என்னோட இவ்வளவு போராளிகளையும் விட்டிட்டு வரமாடேன்,எனது வீரமரணம் இங்கேயே இந்த மண்ணிலேயே நிகழவேண்டும்"

அதுவே அவரின் இறுதி ஆசையாக இருந்தது.ஆனாலும் ஒரு சிறு ஒழுங்கை போன்ற பகுதியூடாக ரத்னம் மாஸ்டர் அவர்களின் கமாண்டோ போராளிகள் மூர்க்கத்தனமாக ஒரு சண்டையை பிடித்து பொக்ஸை உடைத்துக்கொண்டு தலைவரையும் அவர்களுடன் நின்ற மற்றைய போராளிகளையும்  காப்பாற்றீக்கொண்டு முள்ளீவாய்க்கால் பகுதிக்கு சென்றார்கள்.அந்த இறுதி நிமிடங்கள் நீங்க நினைத்துபார்ப்பது போல் சாதாரணமாக இல்லை..

"எல்லாரும் அடிச்சுக்கொண்டே ஓடுங்க்கோ ,நிக்காமால் ஒடுங்கோ" எண்டு கத்திகொண்டே போராளிகள்  ஒரு ஒழுங்கை போன்ற பகுதியை உருவாக்கி தாக்குதல் நடத்திக்கொண்டே ஒடிக்கொண்டிருந்தினம்,பெண்,ஆண் போராளிகளும் பின்னால் சுட்டுக்கொண்டே ஒடிக்கொண்டிருந்தபோதே ராணுவத்தினரின் தாக்குதலில் ஒரு சில போராளிகள் காயம்பட்டு ,வீரச்சாவடைந்து கீழே விழுந்துகொண்டிருந்தார்கள்,அவர்களை மீட்க கூட நேரமில்லாமல் போராளிகள் சுட்டுக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தார்கள், தென்னங்காணியில் நின்ற ஒவ்வொரு தென்னைக்கும் தாவி தாவி ஓடி தாக்குதலில் இருந்து தப்பி ஒடிக்கொண்டிருந்தார்கள்.அனுபமிக்க உணர்வுமிக்க தளபதிகள்,மூத்த போராளிகள் வித்தாகிவிட இறுதி நாட்களீல் 30 நாள் 20 நாள் யுத்த பயிற்சி கொடுக்கப்பட்ட இளைஞர்களும் யுவதிகளுமே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

"பிள்ளையள் நிக்காமல் ஒடுங்கோ ஒருத்தரும் நிக்கேலாது "என்று கத்திக் கொண்டிருக்கும்போதே..

"அண்ணே  காலில வெடி விழுந்திட்டு காப்பாத்துங்கோ"எண்டு கத்திக்கொண்டே ஒரு பெண்போராளி நிலத்தில் வீழ்ந்த போது கூட திரும்பி ஓடிப்போய்காப்பாத்த முடியல.

"தங்கச்சி கொஞ்சத்தூரம் ஓடி வாம்மா என்று கத்தியபோது"

உயிர் வாழவேண்டும் என்ற அந்த ஏக்கம் அந்த பெண்போராளியின் கண்களில் தெரிந்தது,ஒருமாதிரி திரும்ப எழும்பி ஓடி வந்த போது திரும்ப கழுத்தில் வெடி "அண்ணே" என்று கத்திக்கொண்டு கீழே விழுந்த போது   ரீ 56 சை ஓட்டோவில விட்டு சுட்டுக்கொண்டே ஓடிபோய் அந்த பெண்போராளியை தூக்கிகொண்டு கடற்கரை வரை நாக்கில் நுரை தள்ள ஓடிவந்து சேர்ந்த ஒவ்வொரு போராளியின் வேதனைகளும் சோதனைகளும் எனது பெரியம்மா போல கனவு கண்டுகொண்டிருக்கும் எந்த தமிழருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.அந்த கழுத்தில் வெடி வாங்கிய பெண் இன்றூ கழுத்திலேயே அந்த ரவுண்ட்ஸ் ஜ ஆப்பிரேசன் பண்ணீ வெளியில் எடுக்க முடியாமல் இன்றும் அந்த ரவுண்ட்ஸ் உடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது என் கண்முன்னே நின்ற ஒரு விம்பம் மட்டுமே..

இறுதி நாட்கள் நெருங்கியபோது தலைவர் மீதமாக இருந்த தளபதிகளிடம் சொன்ன வார்த்தைகள்

"சனம் பிரபாகரன் இருக்கிறார் இயக்கம் இருக்கு சண்டை பிடிச்சு காப்பாத்தும் எண்டு இண்டைக்கு வரைக்கும் எங்களுக்கு பின்னால வந்திட்டு எல்லா கஸ்டத்தையும் தாங்கிக்கொண்டு,ஆனா யாருமே அதே உணர்வோட போராட வரேல்லை..,இண்டைக்கு நாங்கள் உலகநாடுகளுக்கெதிராக சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கிறம். ஆனால் முடிவு எனக்கு தெரியுது.அதனால இறுதிவரைக்கும் நான் இந்த மண்ணை விட்டு தப்பி போகப்போறதில்லை. என்னோட கடைசி நிமிடம் வரை இந்த மண்ணிலேயே இருக்கணும். என்னோட பிஸ்டலோட கடைசி ரவுண்ட்ஸ் இருக்கும்வரை நான் எதிரியோட சண்டை பிடிக்கவேணும் யார் என்ன சொன்னாலும்.என்னோட வீரச்சாவு இந்த மண்ணிலேயே நிகழ வேணும்.இவ்வளவு மக்களையும் போராளீகளையும் போராட்டத்துக்காக இழந்திட்டு நான் மட்டும் தப்பி ஓட விரும்பேல்ல.. எனக்காக துர்க்கா,விதுஷா,தீபன் கடாபி ஆயிரமாயிரம் போராளிகள் கடைசிவரை சண்டை போட்டது கண்ணுக்குள்ள இப்பவும் இருக்கு..எனது வீரமரணம் உலக்குக்கே தெரியவேணும்.அப்போதான் இனிமேலும் பிரபாகரன் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் எண்டு தமிழ்ச்சனம் இருக்கமாட்டினம், இனிமேல் தமிழ் மக்கள்தான் போராட்டத்தை தங்களோட கையில எடுக்கவேணும். அதுக்காக நான் சண்டை போட்டு செத்திட்டாலும் என்னோட பொடியை எல்லாச்சனமும் பார்க்கவேணும். 1987  இல தம்பி தமிழீழத்தை கைவிட்டு வேற எதையெண்டாலும் இந்திய திம்பு பேச்சு வார்த்தையில வாங்கிட்டு வந்தாலும் நானே அவனை சுடுவேன் எண்டு சொன்னவர் கிட்டு.. அவரோட அந்த சொல்லை பொய்யாக்க நான் விரும்பேல்ல,எங்கட இயக்கத்தை ஒரு கொள்கையோட வளர்த்தனான்.அந்த கொள்கையை நானே பொய்யாக்க விரும்பேல்ல..எங்கட இயக்க கொள்கையை நான் கடுமையா கடைப்பிடிப்பேன். தயவு செய்து என்னோட கடைசி ஆசையை தட்டிக்கழிக்காதீங்க "

இது அவர் உறுதியுடனும் கண்களில் தமிழீழக்கனவுகளுடனும் சொன்னது.அவர் என்ன சொல்லி இயக்கத்தை கட்டுக்கோப்பாகா வளர்த்தாரோ அதன்படியே அவரும் ஒழுகி எம் தாயகமண்ணீலேயே வீரவித்தாகினார்.

ஆனாலும் இது தெரிந்துகொண்டும் இன்றும் நெடுமாறன்,வைகோ அய்யாவிலிருந்து உலக நாடுகளில் உள்ள புலிகள் சார்ந்த அமைப்புக்கள் தலைவர் அவர்கள் இறுதிக்கட்டத்தில் தாக்குதல் நடத்தி தப்பி ஓடி வாழ்ந்து வருகிறார் என்று ஒரு மாவீரரை ,அவரின் கொள்கையை, விடுதலைப் போராட்டத்தின் கொள்கைகளை சேறு பூசி வருகின்றனர்.

அவர் வீரவித்தாகிவிட்டார் என்று சொல்லிவிட்டு அவருடன் வித்தாகிப்போன அந்த இருபதினாயிரம் மாவீரர்களின் கனவை நனவாக்க நாம் உழைக்கவேண்டும் என எல்லோரும் ஒன்றாக நினைக்கவேயில்லை.
 இனிமேலும் தலைவர் அவர்களை கேவலப்படுத்தி அவர்கள் அரசியல் நடத்துபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.அனைத்துமக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும்.இனிமேல் தமிழர்களின் எதிர்காலம் எங்களின் ஒன்றுபட்ட கைகளில் தான் இருக்கென்று உரத்து சொல்லவேண்டும்.இன்று உலக நாடுகளின் கொள்கை வரைபுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.எமது போராட்டம் நியாயமானது என்றூ சிறுக சிறுக தெரிய வந்துகொண்டிருக்கின்றன.அதனை அப்படியே விட்டு விடாமல் அனைவரும் கரம் கோர்த்து எமது திசையிலேயே இழுத்து வரவேண்டும் அதற்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். அதைவிடுத்து மீண்டும் ஆயுதம் தாங்கி போராடுவோம்  என்று வீண் கூச்சல் போடாதீர்கள்.இன்றூம் அவரின் பெயரில் இயக்கம் நடத்தவும் காசு சேர்க்கவும் பயன்படுத்தவது எந்தளவில் நியாயம் ? மக்களின் பொறுப்பை அவர்களின் கைக்களில் கொடுக்கவேண்டும், இல்லாவிடில் 2020 இல் கூட தலைவர் திரும்ப வருவார் எண்டு கதை அளந்துவிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஏனேனில் இனிமேல் ஆயுதபோராட்டம் என்று ஒன்று வந்தால்

1) போராட்டத்தால் பாதிப்புற்ற மக்கள் மத்தியில் எதிர்ப்பே மிஞ்சும்.

2) உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற உணர்வு  மங்கியிருக்கும் இந்த காலத்தில் மீண்டும் போராட ஆள் சேர்த்தால் அது மற்றைய ஆயுதகுழுக்களைப்போல்தான் போய் முடியும்.

3) விடுதலைபோராட்டம் பற்றீய உணர்வுள்ள தலைமுறை இன்று குடும்பம்,பிள்ளைகள் என்று செட்டிலாகிவிட்ட நிலையில் மீண்டும் சிந்திக்கவே மாட்டார்கள்.

இவையெல்லாத்தையும் விட முக்கியமான கேள்வி..
பலர் சொல்வது போல ஒரு வேளை தலைவர் அவர்கள் திரும்பி வந்தால் அவரிடம் மக்கள் முன்பு வைத்திருந்த பாசம்,அன்பு,உரிமை இருக்காது.. உங்களை நம்பி வந்த எம்மை ஏன் விட்டு போனீர்கள் என்ற கேள்வி கணைக்களுடன் தான் மக்கள் காத்திருப்பார்கள் ???????????????????????????????????




08 ஜனவரி, 2012

புதுக்குடியிருப்பில் எம்மவர்களின் உள்ளூர் தயாரிப்புகள்

 இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான தகவல்களை பெற புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்தபோது இராணுவத்தளபதியின் அனுமதி பெற்று கொண்டு தேசியத்தலைவர் அவர்களின் நிலக்கீழ் இருப்பிடங்களுக்கும் உள்ளூரில் நம்மவர்களால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பாதுக்காக்கப்பட்டுவரும் தளத்துக்கும் சென்று வந்தேன்.. கண்ணீரைக்கூட வெளியிடமுடியாமல்

01 ஜனவரி, 2012

புது வருட நல்வாழ்த்துக்கள் 2012

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,எவற்றையெல்லாம் சென்ற வருடம் செய்ய நினைத்து எம்மால் முடியாமல் போனதோ அவற்றை இந்த வருடம் செய்ய முயற்சிப்போம். மன்னிப்பை எம் எதிரிகளுக்கு ஒரு தடவை கொடுத்துபார்ப்பொம்  துரோகிகளை மட்டும் தூரமாய் தள்ளீ வைப்போம்

27 டிசம்பர், 2011

ஆட்டிறச்சி கறியும் ஆத்து வெள்ளமும்


"என்னடா இண்டைக்கு மத்தியான சாப்பாடு" என்று அம்மா ஸ்கைப்பில் கேட்கவும்


"இண்டைக்கு  ஆட்டு இறைச்சி வாங்கி கறி காய்ச்சப்போறேன் கூடவே கோவா கறி" 

"டேய் நீ பிள்ளைக்கு மொட்டை அடிக்க கதிர்காமம் போட்டு வந்திருக்கிறாய்...
அப்பொ இண்டைக்கு நீ மச்சம் சாப்பிடக்கூடாது,அதால இண்டைக்கு மரக்கறி சமைச்சு
 5 பிட்ஷா பாத்திரம் ஏந்துவோருக்கு சாப்பாடு கொடுக்கணூம்டா"  என்று அம்மா சொல்லவும்
 எனக்கு சப்பென்று போயிட்டு 

சீ இண்டைக்கு ஆபீஸ் லீவு, அதிகாலை தான் கதிர்காமத்தில இருந்து வீட்டுக்கு வந்திருந்தோம்..
3 நாள் மரக்கறி சாப்பிட்டு நாக்கு செத்துபோயிருந்திச்சு..லீவுதானே ஆட்டிறச்சிக்கறியோடா ஒரு வெட்டு வெட்டுவோம்ன்னு பார்த்தா அம்மா அதுக்கு புல்ஸ்டாப் போட்டிட்டாங்க.காலையில கலண்டரில மிருகஷீரடம் நட்சத்திரத்துக்கு சந்திராஸ்டமம் எண்டு போட்டிருந்தப்பவே கொஞ்சம் அலேர்ட் ஆகியிருக்கணும் சரி கடவுளோட விடயம் விளையாடமா இருப்பம் எண்டு நினைச்சுகொண்டு வரும் வழியில் நுவரேலியாவில்  இருந்து வாங்கி வந்த மரக்கறீ எல்லாத்தையும் குளிர்சாதனப்பெட்டியில இருந்து  எடுத்து வைந்தேன்..

"என்னங்க பொண்ணூ என்னை விடுறா இல்லை.. அழுதுகிட்டே இருக்கிறா... நேரம் வேற போய்க்கொண்டிருக்கு.... நீங்க சமைக்கிறீங்களா இண்டைக்கு " வீட்டுக்காரம்மா குண்டைத்தூக்கி போட்டா..

"என்னம்மா இண்டைக்காச்சும் நாக்குக்கு ருசியா சாப்பிடலாம்ன்னு பார்த்த விடமாட்டியாடி"

ஆஹா சிங்கம் இண்டை கிடாய் இறைச்சிய வேட்டையாடி உடம்பு அசதி தீர ஒரு தூக்கம் போடுவோம்ன்னு பார்த்தா இப்படி ஒரு சத்திய சோதனை..சரி சரி குடும்பம்ன்னு வந்திட்டாலே  இதெல்லாம் சகஜம்தானே எண்டு மனதிற்க்குள் நினைத்துக்கொண்டே சமையல் வேலையைத்தொடங்கினேன்..

அப்போதுதான் அந்த 5 பெக்கேர்ஸ் க்கு எங்கே போவதுன்னு யோசித்தபோது நினைவு வந்தது Cargills Food City தான் . அங்கேதான் வாசலில் அமர்ந்திருந்து போற வாற அனைவரிடமும் உதவி கேட்பார்கள். அப்பொ அவர்களுக்கே கொடுத்திடலாம்ன்னு நினைத்த போதே மனம் கொஞ்சம் கிலேசமடைய தொடங்கியது..

எனேனில் சாதரணமா வீட்டில அப்பா வீட்டுக்காரம்மா எனக்கு மட்டும் சமைக்கிற நான் இன்று இவர்களுடன் சேர்த்து 5 பேருக்கும் சமைக்க வேண்டிய நிலைமை வீட்டில இருக்கிறவங்க உப்பு புளி முன்ன பின்ன இருந்தாலும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க,ஏன்னா அப்படி சொன்ன அடுத்த முறை அவங்களையே சமைக்க சொல்லிவிடுவேன்னு பயம் ஆனா Cargills Food City க்கு அடிக்கடி போய் பொருட்கள் வாங்கி வருவேன்..அதனால கொடுக்கும் உணவை சுவையாக கொடுத்துவிடவேண்டும் இல்லாட்டா அடுத்த முறை அங்கே போகும்போது எல்லோருக்கும் முன்னால என்னோட உணவோட திறத்தை சொல்லி அண்டர்வெயரை உருவி விட்டு சிங்கத்தை அசிங்கப்படுத்திடுவாங்களே, டேய் கீர்த்தி உனக்கு இண்டைக்கு விஷ பரீட்சைபார்த்து பாத்தியை கட்டுடான்னு மனசாட்சி அபாய கொடியை காட்டியது.. சரி வாறது வரட்டும்ன்னு பீற்றூட்,கரட் & லீக்ஸ்,உருளைக்கிழங்கு கறியுடன் வல்லாரை சம்பலும் அப்பளமும் பொரித்து சமையலை முடித்தேன்..


உடனேயே அவற்றையெல்லாம் 5 பார்சலாக கட்டி டவுனுக்கு போனேன், அங்கே போய்ப்பார்த்தா அதிர்ச்சியா இருந்திச்சு, எந்த ஒரு பிட்ஷா ஏந்துபவர்களையும் Food City வாசலில் காணவில்லை..என்னடா இது இனி எங்கே போய் தேடலாம்ன்னு யோசிச்சுக்கொண்டே டவுனில் உள்ள கோயில்கள் எல்லாவற்றிற்கும் சென்று தேடினேன்..
அசுமாத்தத்திற்க்கு கூட ஒருத்தரையும் காணவில்லை... ரெயில்வே ஸ்டேசனுக்கும் போய் பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது.. 

என்னங்கடா நான் கதிர்காமம் போயிருந்த 3 நாளிலையே வவுனியா டெவலப் ஆகிட்டிச்சா,ஒருத்தனை கூட கண்ணீல காணோம்,இதையெல்லாம் சொல்லிட்டு செய்யமாட்டிங்களாடா, 


தொங்கிய முகத்தோடு வீட்டுக்கு போகவும் கையில் பார்சலைப்பார்த்ததும்

"என்னங்க கொடுக்கலையா என்று கேட்டா வீட்டுக்காரம்மா  எல்லா இடத்திலயும் தேடிட்டம்மா ஒருத்தனையும் காணேல்ல என்ன செய்ய "என்று கேட்டேன்.

ஏங்க ஜெயக்குமரன் அண்ணா கூடவா இல்லை ஒரு மிஸ் கோல் போட்டு பாருங்க ஆட்டோ புடிச்சு வந்து 
புல் கட்டு கட்டுவாரே என்று சொல்லவும் 

என மனம் போன மாசம் நாம சாப்பாடு கொடுக்க பெக்கேர்ஸ் தேடி யாருமே இல்லாத போது JK க்கு ஒரு மிஸ் கோல் போட்டவுட்னே அவன் ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்து  முருங்கக்காய் தோல் கூட விடாம சப்பி சாப்பிட்டு காயாலேயே சாப்பட்டு கோப்பையை வழித்து கழுவி விட்டு போனது நினைவுக்கு வந்தது .

இல்லம்மா அவன் புது வருசம் ஊருக்கு போய்ட்டான் ..



".மாமி சொன்னா கட்டாயம் கொடுக்கணுமாம் இல்லாட்டி சாமிகுத்தமாயிடுமே" என்று பீதியை கிளப்ப என்ன செய்யலாம்ன்னு சோசிச்சுக்கொண்டிருக்கும்போதே K டீவியில பஞ்சதந்திர பட ஒளிபரப்பு விளம்பரச்ம் போய்க்கொண்டிருந்திச்சு.. லைட்டா மைண்டில பொறீ தட்டியது..

பழைய துணிக்காக வைச்சிருந்த லுங்கியையும் பனியனையும் எடுத்து வந்தேன் .அங்கங்கே லைட்டா கிழிச்சேன், அப்படியே நிலத்தில போட்டு கால்களால மிதித்துவிட்டு எடுத்து எனக்கு போட்டு பார்த்தேன்..
நானே ஷாக்காயிட்டேன், அப்பிடியே ஒரு  பெக்கரை போலவே இருந்தேன்.. கீர்த்தி உனக்குள்ளே இப்படி ஒர் கலைஞன் ஒளிஞ்சிருந்திருக்கானேடா என்று சொல்லவும்

"அது ஒன்றும் கலைஞன் இல்லை அப்பிடியே ஒரியினல்  பெக்கர் மாதிரியே இருக்கீங்க " என்றாங்க வீட்டுக்காரம்மா... 

"காப் கிடைக்கிற நேரமெல்லாம் சிங்கத்தை சீண்டிப்பார்க்கிறதே உனக்கு வேலையாப்போச்சு..பொறு பொறு பொண்ணு கொஞ்சம் வளருட்டும் அதுக்குப்பிறகு பாருடி இந்த சிங்கத்தோட அனிமல் பிளனட்

வேட்டை டிரையிலரை"  என்று சொல்லிக்கொண்டே அந்த 5 பார்சலை நானே பஞ்சதந்திர 5 வேஷம் போட்டு உண்டு முடித்தேன்.. முடித்ததும் வீட்டுக்காரம்ம கைத்தாங்கலா எழுப்பி விட்டாங்க...


******************************************************************


"என்னங்க மணி ஆறாச்சு.... சாப்பிட்டு  2 மணிக்கு வோஷ் ரூமுக்குள்ள போனீங்க இன்னும் என்னங்க செய்துகிட்டிருக்கீங்க கதவை பூட்டிக்கொண்டு" 

"ஆ இங்கே வடை சுட்டு கொண்டிருக்கிறேன் ,ஏண்டி வோஷ் ரூமுக்குள்ள என்ன செய்வாங்கன்னு தெரியாதா உனக்கு"
"அதுசரி 6 மணியாச்சா !!!!!!

"பின்னே ஆகாதா போய் 4 மணித்தியாலம் ஆச்சு  என்ன ஆச்சு உங்களுக்க"

"ஏண்டி நானா விரும்பியா இங்கெ டெண்ட் அடிச்சு உட்கார்ந்து இருக்கேன்... நிக்காம போய்க்கிட்டிருக்கம்மா ...
"நீ ஏதோ சொல்லிகொண்டிருக்கிறாய் என்கிறது மட்டும் புரியுது ஆனா கிணத்துக்குள்ள இருந்து கதைக்கிறது மாதிரி கேட்குதம்மா"

"அய்யய்யோ என்னாச்சுங்க  என்ன திடீரெண்டு"


"அதுதாண்டி எனக்கும் புரியல  நானும் ரேஸ்ட்டா இருக்கெண்டு 5 பார்சலையும் சாப்பிட்டேன், இப்ப வயித்துக்குள்ல யாழ்தேவி ரெயினே ஒடிக்கொண்டிருக்கிற சத்தம் கேட்குதடி "

"அதுசரி நீயும் தானே சாப்பிட்டாய் எனக்கு மட்டும் ஏன் இப்பிடி ??? "

"நான் எங்கே சாப்பிட்டேன்"

"ஏண்டி நீ இன்னும் சாப்பிடலையா"


"இல்லங்க நீ வெளில போயிருந்த நேரம் கொஞ்ச சாப்பாட்டை நாய்க்கு கொஞ்சம் வைச்சேன் சாப்பிட்ட நேரத்தில இருந்து ஊளையிட்டுகொண்டே இருந்திச்சு,அதனால நானும் மாமாவும் எதுக்கு ரிஸ்க் எடுப்பான்னு நினைச்சு திரிபோஷா குழைச்சு சாப்பிட்டோம்டா"


" அஹா எல்லாரும் அலார்ட்டாத்தான் இருந்திருக்கீங்களா அப்ப நான் தான் அவுட்டா ,அடிப்பாவி ஏண்டி இதை முதல்லேயே சொல்லல.. ஓ அதுதான் நான் வீட்டுக்கு வரும்போஒது நம்ம நாய் என்னை வெறித்தனமா பார்த்துகிட்டு இருந்திச்சா "அய்யய்யோ கடவுளே அது மனசில இதை வைச்சு நாளைக்கு பாய்ஞ்சி கறியை கவ்விடாம பார்த்துக்கொள்ளுப்பா "

"ஏண்டி ஒரு வார்த்தை சொல்லல"


"இவ்வளவு நாளும் நீங்க சமைச்சு வைச்சிட்டு ஆபீஸ் போய்ட்டு கடையில சாப்பிட்டு வாறீங்கநாங்க பட்ட வேதனை கஸ்டம் உங்களுக்கு தெரிய வேணாமா அதுதான் சொல்லல..சரி சரி வெளில வாங்க கெதியா" 

"என்னது கெதியா வெளில வரவா போடி இவளே ,நல்லா வருது வாயில ஆத்தில வெள்ளம் ஓடின கணக்க போய்க்கிட்டிருக்கு இந்த நிலைமையில நான் எப்போ வெளில வாறது , ரூமுக்கு தவண்டு வந்து சேரவே விடிஞ்சிடும்டி "

.


23 டிசம்பர், 2011

மணி டியூசன் பயபுள்ளக-உண்மைக்கதை

 1995 இடப்பெயர்வுக்கு முன்பு கொக்குவிலில் மணி டியூசனில் நாங்கள் கல்வி கற்றிருந்தோம். மணி டியூசன் பற்றி இன்னுமொரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதால் அதைப்பற்றி சொல்லுவதை தவிர்த்துவிடுகிறேன்.அங்கே படித்த இரண்டு நண்பர்களின் கதைதான் இது .

1995 ம் ஆண்டு ஏப்பிரல் 3ம் ஈழப்போர் ஆரம்பித்ததன் பின்பு யாழ்ப்பாணத்தை நோக்கி இராணுவத்தினர் பெருமெடுப்பில் தாக்குதல் நடத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக1995 ம் ஆண்டு ஜப்பசி மாசம் 30 ம் திகதி காலையில் யாழ்ப்பாணதின் அனைத்து மக்களையும் உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப்பகுதிகளுக்கு  செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் .


பூத்த கொடி பூக்களின்றீ தவிக்கின்றது.பூங்குருவி துணைகளின்றி தவிக்கின்றது என்ற பாட்டிற்கு உதாரணமாக அன்றைய பாரிய இடப்பெயர்வு இடம்பெற்றது. சுமார் 300,000 க்கும் மேற்பட்ட யாழ் மக்கள் ஒரே நாளில் ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.இதில் பல சொந்தங்கள், நட்புகள் எல்லாம் விடுபட்டன.



ஆனால் அதன்பின்பு அனைவரையும் இணைத்துக்கொண்டது தபால் மூலமாகத்தான்.அப்போதைய காலத்தில் தொலைபேசி வசதிகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தது.அப்போது தபால் மட்டுமே தொடர்பாடலில்100 %  உதவிகளைச் செய்திருந்தது. இதே போலத்தான் நண்பர்களும் தொடர்பு அறுந்துபோன நட்புகளை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார்கள்.


பள்ளீ பருவ நண்பர்களான ரஜீவ் பருத்தித்துறை சென்று விட பிறேம் கிளிநொச்சி சென்றுவிட்டான்.சிறிது காலத்தின் பின்பு இவர்கள் இருவரும் தபால் மூலம் தொடர்பு கொள்ளத்தொடங்கினார்கள்.அதுவரைகாலமும் ஜாலியாய் திரிந்த பிறேம் வாழ்க்கையில்  மண்ணை அள்ளிப்போட்டான் ரஜீவ் ஒரு கடிதம் மூலமா.


நீண்டகாலத்திற்கு பிறகு தொடர்புகொள்ளுவதால் ஊர் நிலைமையையும் தங்களோட பழைய நினைவுகளையும் எந்த விதமான ஒளிவு மறைவு இல்லாம கடித்ததில் இப்படி எழுதி இருந்தான் ரஜீவ் .

"என்ன மச்சான் பிறேம் எப்படி போகுது கிளிநொச்சியில . இங்கே ஒரே போர் மச்சான்.என்னதான் இருந்தாலும் மணீ டியூசன் இந்துக்கல்லூரி போல வராது. டேய் நீ மணி படிக்கேக்க சைட் அடிச்சியே அந்த வேம்படி கலட்டி லேன் பொண்ணு , இப்போ எங்கட வீட்டுக்கு பக்கதிலதாண்டா இருக்கிறாள் "

"நீ எத்தனை தடவை டிரை பண்ணீயிருப்பாய் லெட்டர் கொடுக்க.இப்போ நல்ல டைம் மச்சி , ஆனா நீ அங்கேயில்ல இருக்கே என்ன செய்யுறது.. நீ வேணும்னா எனக்கு அனுப்புற லெட்டருக்குள்ள வைச்சு அந்த பொண்ணுக்கு லெட்டரை அனுப்பி விடு நான் அதை கொடுத்துவிட்றேன் "

எண்டு நண்பேண்டா கணக்கில கடிதம் எழுதி இருந்தான்..

இது நல்ல விடயம் தானெ எண்டுதானே கேட்கிறீங்க..அதுதான் இல்லை கடிதத்தை பிரித்து வாசிச்சது பிறேம் ன் அம்மா... டியூசன் விட்டு நேரம் பிந்திப்போனாலே ஒண்ணுக்கு போற அளவில அடி பின்னி எடுக்கிற அண்டி ,இந்த கடிதம் வாசிச்ச பிறகு என்ன நடதிருக்கும் எண்டு யோசிச்சு பாருங்களேன்.பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் முடிந்த பிறகு அன்ரி பிறேம் ஜ கூப்பிட்டு

"டேய் நீ அவனுக்கு எனக்கு முன்னால ஒரு கடிதம் எழுது, இனிமேல் அதை பற்றி கதைக்கவேண்டாம் ,எனக்கு படிப்பு அம்மா அப்பா தான் முக்கியம் எண்டு சொல்லி "

என்று பத்ரகாளியின் அவதாரமாய் பிறேமின் முன்னால காட்சிகொடுத்துக்கொண்டிருந்தார்.

பிறேம் மனசில்லாமல் ஏதோ இப்போதைக்கு தலை தப்பினா போது எண்டு நினைச்சுக்கொண்டு  விரிவா கடிதம் எழுதி விட்டு அன்ரி உள்ளே போன காப்ல


"மச்சான் அம்மா உன்னோட கடித்ததை வாச்சிட்டா,அதனால இங்கே ரொம்ப பிரச்சினை..இனிமேல் அப்படி எழுத வேணாம்.அந்தக்கடிதமும் சும்மா ஒரு தமாசுக்கு தான் எழுதினான்.அதை  சீர்யாஸா எடுக்காதே எண்டு எழுதி எனக்கு ஒரு கடிதம் போடு அதை அம்மா வாச்சிச்சா எல்லா பிரச்சினையும் போயிடும் "

எண்டு  ஒரு சின்னதா ஒரு துண்டுக்கடிதம் எழுதி உள்ளே வைச்சான்.


இந்தக்கடிதம் கிடைச்ச உடனேயே ரஜீவ் வாசிச்ச உடனேயே வெலவெலத்துப் போனான். ஏனெண்டா அவனுக்கு பிறேம் உடைய அம்மாவோட ஸ்ரிக்ட் பற்றி ரொம்ப தெரியும். உடனேயே கடிதம் எழுதி அனுப்பினான் பிறேம் க்கு.

பிறேம்  வந்த கடித்தத்தை அம்மா முன்னால வாசிச்சான் .. அதில் பிறேம் ரொம்ப நல்லவன் சத்தியம் பண்ணாத குறையா பிறேமைப்பற்றி புகழ்ந்து எழுதியிருந்தான் ரஜீவ் ..அன்ரியும் அதைப்பார்த்திட்டு ரொம்ப சந்தோசபட்ட நேரத்திலதான் பிறேம் க்கு சந்திராஸ்டமம் நல்லா வேலை செய்தது.. பிறேமின் தங்கச்சி வந்து தபாலில் இருந்த முத்திரையை எடுப்பதற்காக கடிதம் வந்த உறையைக்கிழிக்க அதனுள்ளே இன்னுமொரு கடிதம் இருந்தது.

"அம்மா உள்ளுக்குள் இன்னொரு லெட்டர் இருக்கு இதை வாசிக்கலையா"
எண்டு அதை எடுத்து தாயிடம் கொடுத்தாள் தங்கை.அதில் ரஜீவ் எழுதியிருந்தான்

மச்சான் நீ சொன்ன மாதிரியே உன்னைப்பற்றி நல்ல மாதிரி எழுதி இருக்கிறேன் அந்த லெட்டரை அம்மாவிடம் கொடுத்துவிடு.  இந்த லெட்டர் உனக்கு .

". அந்த பொண்ணை  இங்க இன்னும் ரெண்டு பேர் சைட் அடிக்கிறாங்கள் என்னமாதிரி உன்னோட முடிவு பேசாமா கடிதத்தில எழுதி எனக்கு அனுப்பி விடு நான் கொண்டு போய் கேட்கிறேன் ,மச்சி உடனேயே கேட்டிடு இல்லாட்டி மிஸ் ஆகிடும்டா ( நண்பன்னா  இப்பிடிதான் இருக்கணும்)"

என்று காதல் தூதுவனாக ரஜீவ் எழுதியிருந்தான் ஆனால் விதி யாரை விட்டது .
 
இதையும் பிறேமின் அம்மாவும் வாசிச்ச பிறகு என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும் தானே . காணி எல்லையில கதியாலாக போட்டிருந்த பூவரசந்தடி முறிக்கப்படும் சத்தம் விருட்சமே முறியும் அளவுக்கு கேட்டது, தடி முறிக்கிற சத்தமே இப்படியெண்டா அடிவாங்கின பிறேம் எத்தனை நாளைக்கு படுக்கையில் உடம்பு பூரா எண்ணெய் பூசி பாயிலயே படுத்த படுக்கையா கிடந்திருப்பானோ ....

18 டிசம்பர், 2011

அம்மா காப்பாத்து

பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் இந்த பழமொழி ஏனோ இன்று வரை உண்மையாகவே உள்ளது ஆனாலும் இந்த பாம்பை விட ஒரு விடயத்துக்கு சிறுவர் முதல் பெரியவர் நடுங்கி கதறும் விடயம் " வைத்தியசாலை ஊசி "சிறுவர்கள் பயப்படுவதில் ஒரு காரணம் இருக்கிறது ஆனால் பெரியவர்கள் இன்றும் பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை ஒருதடவை பொது வைத்தியாசாலைக்கு சென்று வந்தீர்கள் என்றால் புரியும் அதில் அதிகமானோர் பெண்களே..




நேற்று எனது மகளின் 2 ம் மாத ஊசி போடுவதற்காக ஆஸ்பத்திருக்கு போயிருந்தோம்,அங்கே எல்லா அம்மா,அப்பாக்களும் தமது பிள்ளைகளை கூட்டிவந்திருந்தார்கள் ஊசி போடுவதற்காக.எமக்கு முன்னால் இருந்த தாயின் 4 வயசு சிறுமிக்கு ஊசி போட போனபோது அந்த சிறூமி

"அய்யோ எனக்கும் அம்மாவுக்கும் ஊசி போட வேண்டாம்,அப்பாவுக்கு ஊசி போடுங்கோ,எங்களுக்கு போடாதீங்க "எண்டு கத்தியது அனைவருக்கும்
ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டார்கள்.அதையும்  பொருட்படுத்தாமல் அந்த அழகான நர்ஸ் ஊசி போட்டபோது அந்த சிறுமி

"அம்மா என்னை காப்பாத்து அம்மா என்னை காப்பாத்து" என்று கத்தியபோது அனைவரும் டாக்டர் நர்ஸ் முதல்கொண்டு அனைவரும் சிரித்தார்கள். அப்போது எனக்கு எனது சிறு வயது ஊசியால் விளைந்த அந்த வினை நினைவில் வந்துநின்றது.

நான் எனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையிலேயே பயின்றேன்.அங்கே அன்றைய காலத்தில் எனது உற்ற நண்பனாக இருந்தவன் கருணா என்கின்ற கருணசீலன்.என்னுடன் படித்த மாணவர்களில் எமக்கெல்லாம் முக்கியமானவன் சரா என்கிற " சரவணன்" .அவனைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் உத்தமபுத்திரனில் வரும் சின்னக்கவுண்டன் புலியாக நடிக்கும் அந்த சிறுவனைப்போலத்தான் இருப்பான் சும்மா தள தளன்னு தக்காளியாட்டம் பம்பிளீமாஸ் கணக்கா எம் மத்தியிலேயே கும்முன்னு இருப்பான்.அது எம்மைபோன்ற ஒல்லிக்குச்சியாட்டம் பல்லியாக இருந்த எல்லா மாணவர்களுக்கு ஒரு வித பொறாமைதான்.ஆனாலும் காட்டிக்கொள்ளமாட்டோம் ஆனால் எமது விளையாட்டு எல்லாம் அவனோடுதான் இருக்கும்.

.எமக்கு 7 வயதில் ஒரு தடுப்பூசி பாடசாலையில் போடுவதற்காக நேர்ஸ் எல்லாரும் வந்திருந்தார்கள்,வகுப்பறையே ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது ஊசியை நினைத்து.ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எமது வகுப்பு "அம்மம்மா" டீச்சர் கறிக்கடைக்கு இழுத்துப்போகும் கிடாயாட்டம் இழுத்துப்போய் வாண்டட்டாக ஊசி போட வைத்தார்கள்,நாமும் அழுதுகொண்டே வகுப்புக்கு வந்தபோது அங்கே சராவை காணோம்.


"டேய் கருணா எங்கேடா சரா,ஊசி போட்டிட்டானா?அவன் தானே ஊரே அழியப்போறமாதிரி அழுதுகிட்டு இருந்தானே

"ஓமடா இங்க தான் இருந்தவன்,ஊசி போடுற இடத்திலயும் நான் காணேல்லயே"

"டேய் வசி நீ பார்த்தனியா"

என்று அனைவரிடமும் அக்கறையாக நாம் விசாரித்துக்கொண்டிருந்தது அவனைக்காணவில்லை என்பதற்காக இல்லை அவனுக்கு ஊசி போடும்போது அவன் எப்படி ரியாக்ட் பண்ணீ அழுகிறான் எண்டு பார்க்கதான..நாங்க இப்பவே இப்படி அப்ப சொல்லவா வேணும்..

ஆனாலும் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியது,சில நிமிட தேடல்களுக்கு பின் டீச்சர் சொன்னது சரா புத்தகபையையும் தூக்கிகொண்டு பக்கத்தில் இருக்கும் அவன் வீட்டுக்கு தப்பி ஓடிவிட்டான் ஊசி பயத்தில் என்று..ஆனால் எமக்கெல்லாம் ஒரெ வருத்தம் ஒரு சூப்பர் சீனை பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்று.

அடுத்த நாள் சரா பள்ளீக்கூடம் வந்தப்போது நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டோம்.நாங்கள் எல்லோரும் வகுப்பில் இருக்கும்போது கோபிகா ஓடிவந்து எல்லோரிடமும்

"நேற்று ஊசி போடாதவங்களுக்கு ஊசி போட இண்டைக்கு நர்ஸ் வந்திருக்காங்க எண்டு சொல்லணூம்" அப்போ நாங்கள் எல்லோரும் பல்க்காக இருக்கும் சராவை ஊசி போட போகச்சொல்லி வற்புறுத்தவேண்டும் என்பதே.எல்லாத்திட்டமும் சரிபார்க்கப்பட்டு அப்படியே ஸ்கிரிப்ட் பிரகாரம் நான் ,கருணா,ரஞ்சித்,புரந்தரன்,மதுரா,கோபிகா நிறைவேற்றினோம்..

கட் பண்ணீ ஓப்பின் பண்ணீனா

கருணா,நான்,புரந்தரன்,கோபிகா மதுரா,ரஞ்சித், எல்லோரும் அதிபர் அறையில் நின்றுகொண்டிருந்தோம்.அதிபர் பிரம்பை கையில் எடுத்துக்கொண்டு அருகில் வருவது தெரிந்தது.

குண்டுபயபுள்ள நாங்க ஒரு ஜாலிக்காக

"டேய் சரா ஊசி போடுவோம் வாடான்னு " வற்புறுத்தி இழுத்துகொண்டு வர

"அம்மா காப்பாத்து அம்மா காப்பாத்து" 

எண்டு கத்திக்கொண்டு அப்பிடியே மயங்கி விழுந்திட்டான்..

அப்போ எங்களுக்கு எதுவுமே புரியாத அறியாத  வயசு ஏழு

"டேய் சராவை இவங்கள் இழுத்துபோக சரா கீழே விழுந்து செத்திட்டாண்டா" 

எண்டு பக்கி பய சுதாகரன் கத்திகொண்டு ஓட பாடசாலையே கலவரப்பட்டது.
டீச்சர் வந்து பார்த்தபோது மூச்சு இருந்தது.உடனேயே பக்கத்தில இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு ஓடினார்கள்..அப்பிடியே நம்ம டீமையும் அள்ளீக்கொண்டுபோய் அதிபர் அறையில் நிறுத்திவிட்டார்கள்.

"சேர் சேர் நாங்க வேணுமெண்டே செய்யல சேர்..அவன் நேற்று ஊசிக்கு பயந்து ஊசி போடாம வீட்டுக்கு ஓடிட்டான் சேர்.அதுதான் அவனுக்கு பயத்தை போக்குவமெண்டு இப்படி செய்தனாங்கள் சேர்.."

எண்டு கத்தி கதறிக்கொண்டிருக்கும்போது கோபிகா சொன்னாள்

"சேர் நேத்து அம்மா சொன்னவா அந்த ஊசி போடாட்டி எங்களோட கால் ரெண்டும் சொத்தியாகிடுமாம்,போலியோ வருமாம்.நாங்கெல்லாம் ஊசி போட்டிட்டம் சரவணன் போடாட்டி அவனுக்கு போலியா வந்தா எப்படி சேர் நடப்பான்,இப்பவே பயங்கர குண்டன் நடக்கவே பஞ்சிப்படுறான் பிறகு நடக்கவே ஏலாம போய்ட்டா பாவம்தானே சேர் அதுதான் நாங்கெல்லாம் அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தப்போ மயங்கி விழுந்திட்டான் சேர் "நாங்க அவனுக்கு நல்லது செய்ய நினைச்சது தப்பா சேர்"

என்று கோபிகா கேட்ட கேள்வி அதிபருக்கு சிரிப்பை வரவழைத்திருக்கவேண்டும்,சரி சரி இனி இப்பிடி குளப்படி செய்யக்கூடாது வகுப்புக்கு ஓடுங்கோ என்று சொன்னது நாங்கள் வகுப்புக்கு
போகத்தொடங்கினோம்.

அதன்பிறகு எமக்கு சரவணனை அழவைக்க வேண்டுமென்றால் டேய் ஊசி போட நர்ஸ் வந்திருக்காங்க எண்டு சொன்னால் போது வாயிலேயே வயலினில் முராரி ராகம் வாசிப்பான்.

இப்போ சரா அவுஸியில செட்டில் ஆகிட்டான் ,கொஞ்ச நாளுக்கு முன்னால ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி வீட்டுக்கு வந்தான் அப்போ நானும்  தமசாக கேட்டேன்,

"என்ன மச்சான் ஒரு கிழமை ஆஸ்பத்திரியில இருந்திட்டு வந்திருக்கே இப்பவும் நீ ஊசிக்கு பயந்து கத்தி மயங்கி விழுவியான்னு " கேட்டப்ப சொன்னான் பாருங்க கேட்டா நீங்களே ஷாக்காயிடுவீங்க.

"டேய் இங்கெல்லாம் ஆஸ்பத்திரி சூப்பர் பசிலிட்டி மச்சான், போன முறை எனக்கு ஊசி போடப்போனப்ப நானும் பயந்துகிட்டுதான் இடுப்பை காட்டினேன்"

" தம்பிரி அது இடுப்பில்ல அடுப்பு"

"அந்த சூப்பர் பிகர் நர்ஸ் ம் ஊசி போட நான் என்னை அறியாமல் கத்தி" 

" டேய் இது உனக்கே ஓவராயில்ல, 30 வயசில உன்னை அறியாமல் கத்தினியா,நீ ஏதாசும் ரீசனோடதாண்ட கத்தியிருப்பே"

"நீ கேளு மச்சி, வலியில எதையோ பிடிச்சிட்டு கண்ணை திறந்து பார்த்தா அந்த நர்ஸோட இடுப்பை பிடிச்சிட்டிருந்தேன்..சாரி மிஸ் ஒரு கில்ப்புக்காக தெரிஞ்சு உங்க இடுப்பை பிடிச்சிட்டேன் எண்டு சொன்னேன் "

"அடப்பாவிப்பயலே ,நச்சுன்னு அந்த நர்ஸ் உன்னோட தாவாங்கட்டையிலேயே ஒண்ணு விட்டிருக்குமே"

"அதெல்லாம் இலங்கையிலதான் மச்சி,இங்கே அப்பிடியில்ல , பயமாயிருந்தா பிடிச்சுக்கொள்ளுங்கன்னு அந்த நர்ஸே சொல்லிட்டா"

"நர்ஸே சொல்லிட்டாளா,சிறுக்கி மக ... அப்போ நீ  அடுத்தநாள் விடியும் வரைக்கும் பிடிச்சிட்டு இருந்திருப்பியேடா"

"சீ இந்த மேட்டர் நமக்கு தெரியாமப்போய்ட்டே,நம்ம ஊரிலையும்தான் எத்தனை நர்ஸ் இருக்காளுக மூஞ்சியை உம்முன்னு வைச்சிகிட்டு மாட்டுக்கு ஊசி போடுற நினைப்பிலேயே ஒரே செருகுதான்..

ஓ இதனாலதான் நம்ம பயபுள்ளக எல்லாம் டூரிஸ்ட் விசாவில அங்கே போனாப்பிறகு அசேலம் அடிக்குதா  ?