04 ஜூன், 2011

மதுரையின் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அழகிரிக்கு எதிரான கோஷம்

னைத்து மாவட்டங்களிலும் கடந்த 23-ம் தேதி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அஞ்சாநெஞ்சன் கோட்டை என்று சொல்லப்பட்ட மதுரையில் மட்டும், கடைசி நேரத்தில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. காரணம், கூட் டத்தை நடத்த மண்டபம் கிடைக்கவில்லை. குறிப்பாக, கட்சியின் உடன்பிறப்பு ஒருவரே தனது மண்டபத்தைத் தர மறுத்துவிட்டார்!
இத்தனைக்கும் அந்த மண்டபத்துக்கு சொந்தக்காரர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அழகிரியின் பெயரைச் சொல்லியும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியும் முடிந்த வழிகளில் எல்லாம் தன்னை வளப்படுத்திக் கொண்டவர். தேர்தலின்போது இவரது மண்டபத்தில் வைத்துத்தான் பட்டுவாடா நடந்தது. ஆனால் இப்போது, 'யாரைக் கேட்டு இங்கே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தீர்கள்? இதனால் எனக்கு ஏதாவது சிக்கல் வந்தால்..?'' என்று ஆவேசப்பட்டாராம் அந்தப் பிரமுகர். இதனால் இரண்டு நாட் கள் கழித்து ஒரு ஹோட்டலில் வைத்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார்கள். மதுரையில் தி.மு.க-வின் இன்றைய பரிதாப நிலை இதுதான்!
மதுரையில் கட்சியின் உண்மையான விசுவாசிகளோ, ''ஏதாச்சும் கேஸ்ல நீங்களா அந்தாளப் பிடிச்சு உள்ள வெச்சுட்டீங்கன்னா நல்லது. இல்லாட்டி எங்க ஆளுங்க இருக்குற ஆத்திரத்துக்கு என்ன பண்ணுவாங்கனு தெரியாது'' என்று அழகிரியையும் மதுரை தி.மு.க-வையும் ஆட்டிப் படைத்த முக்கியப் புள்ளியின் பெயரைச் சொல்லி டென்ஷன் ஆகிறார்கள்.
மேலும் பேசியவர்கள், ''தி.மு.க. ஆட்சிக்கு வரும்போ தெல்லாம் புதுசு புதுசா ஒரு கூட்டம் வந்து அழகிரியை ஆண்டுட்டு போயிடுது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தப்ப வீடியோ கடை அண்ணாமலையும் ஹோட்டல் பிரமுகர் ஒருத்தரும் அழகிரியை ஆட்டுவிச்சு அவங் களுக்கு வேண்டியதை சாதிச்சுக்கிட்டாங்க. ஆட்சி மாறுனதும் அவங்க காணாமப் போயிட் டாங்க. சோதனையான அடுத்த ஐந்து ஆண்டு களும் நாங்கதான் மதுரைக்குள் கட்சியை காப்பாத்தினோம்.
1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்ததும் அழகிரியை வளைக்க இன்னொரு கூட்டம் வந்தது. எங்களை அழகிரி வீட்டுக்கு வெளியே நிறுத்திட்டாங்க. அப்போ புத்தகக் கடை சந்திரன் என்பவர் அழகிரியை வளைச்சு தன்னுடைய யாதவர் சாதிக்காரர்களை எல்லாம் கை தூக்கி விட்டார். இவர் சொல்லைக் கேட்டுத்தான் யாதவரான குழந்தை வேலுவை மேயராக்கினார் அழகிரி. அந்த ஆட்சி முடிந்ததும் அவங்களும் அழகிரியை விட்டுட்டுப் போயிட்டாங்க. அ.தி.மு.க. ஆட்சியில் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சிக்கிய நேரத்தில் அவரை வைத்து வாழ்ந்தவங்க எல்லாம் ஓடி ஒளிஞ்சுட்டாங்க.
2006-ல் மீண்டும் கழக ஆட்சி வந்ததும் மதுரை தி.மு.க-வை ஆட்டிப் படைக்க வந்தார் ஒரு கான்ட்ராக்டர். கடந்த கால அனுபவங்களில் பாடம் கற்காத அழகிரி,  அவரையும் அனுமதித்தார். மதுரை மேயர் பதவியில் தனது சாதிக்காரரான தேன்மொழியை அமரவைத்தார். இவரோடு கூட்டு என்ற ஒரே காரணத்துக்காக புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தளபதியை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆக்கினார். கட்சியில் அதிகாரம் செய்யும் அந்த நபர் இதுவரை கட்சிக்காக போராடி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா?
தா.கி. கொலை வழக்கில் அழகிரி கைதாகி வேனில் ஏற்றப்பட்டபோது அந்த வேனுக்குப் பின்னால் ஓடிய தி.மு.க. தொண்டர்களை கண் மூடித்தனமாக தாக்கி யவர் போலீஸ் உதவிக் கமிஷனர் குமாரவேலு. கடந்த ஆட்சியில் அவர்தான் ஐ.எஸ். உதவி கமிஷனராக இருந்து மதுரையை ஆட்டிப் படைச்சார். இதன் பின்னணியிலும் அந்த நபரின் சாதி இருக்கிறது. 
மதுரை உயர் நீதிமன்றத்திலும் மாவட்ட நீதிமன்றத்திலும், கட்சிக்காக உழைத்தவர்களை துரத்திவிட்டு காசுக்காக சிலரை நியமித்த கொடு மையை அழகிரியிடம் யார் சொல்வது? தேர்தல் முடிவுகளுக்குப் பின் அழகிரியை பார்க்கப் போன ஒன்றிய செயலாளர்களை, 'தோத்துப் போயிட்டு இங்க எதுக்காக வர்றீங்க’னு எடுத்தெறிந்து பேசும ளவுக்கு அழகிரி இன்னமும் அவர்களுக்கு இடம் கொடுத்து இருக்கிறாரே!'' என்று ஆதங்கத்தில் கொதிக்கிறார்கள்.
''இடைத் தேர்தலில் தனது உறவினருக்கு அழகிரி மூலம் ஸீட் வாங்கிக் கொடுத்தவர்தான் இப்போது கட்சிக் கூட்டம் நடத்த மண்டபம் கொடுக்க மறுக்கிறார். இதெல்லாம் ஆரம்பம்தான். இப்படி இன்னும் பலர் கிளம்பக் காத்திருக்கிறார்கள். 'என்னைக் காப்பாற்ற அ.தி.மு.க. அமைச்சரின் தம்பி இருக்கிறார்’ என்று சொல்லிக் கொண்டும், வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிவிடலாமா? என ஆலோசனை நடத்திக் கொண்டும் இருக்கும் துரோகிகளைத்தானே அழகிரி இன்னமும் நம்புகிறார்?'' என்றும் வேதனைப்படுகிறார்கள் தொண்டர்கள்.
இதற்கிடையே கடந்த 27-ம் தேதி நடந்த மதுரை புறநகர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில், ''பணம் இருக்குறவனுக்குத்தான் தேர்தலில் ஸீட்டும், பதவிகளும் குடுத்தீங்க. இப்ப என்னாச்சு?'' என்று ஆவேசப்பட்ட உடன்பிறப்புகள், முக்கியப் புள்ளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ''அந்த நபரைக் கட்சியைவிட்டு நீக்கு!'' என்று கோஷம் போட்டு இருக்கிறார்கள்.
இந்த தோல்வியிலாவது, அழகிரி தன்னை சுயபரிசோதனை செய்துக் கொள்ளட்டும். 

நன்றி ஜீனியர் விகடன்

கருத்துகள் இல்லை: