06 மே, 2011

ஈழத்தில் போர் ஓய்ந்து ...

ஈழத்தின் நவீன கவிஞர் சி. சிவசேகரம் அவர்களின் கவிதை....


என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர்!

இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்


இழவு விடுகளை என்றாள் ஒரு கிழவி

குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்


போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து

ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி

கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்

முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்


உடல் ஊனமானோரை என்றாள் ஒருதாதி

மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி

இறக்குமதி வாய்ப்புகளை என்றான் ஒரு விநியோகஸ்தன்

விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்


மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி

பொருட்களின் தட்டுபாட்டை என்றாள் ஒரு குமரி

பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்

தரவேண்டிய என் பங்கை என நினைவுடினான் நினைவூட்டினான் ஒரு

சோதனைச் சாவடி அதிகாரி

இன்னும் விற்றுமுடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்


என்னுடைய கமிஷனை என்றான் ஒரு தரகன்

குண்டெறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்

மேலுழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி


ரத்துச் செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்

போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி

மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்

பொறாமைப்பட்டான் அவனது மேலதிகாரி

என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி

என் நண்பனின் பிரிவை என வருந்தினான் அவனது தோழன்

வீர மரணங்களை என்றான் ஒரு பிரச்சாரகன்

விடுதலையை என அடித்துரைத்தாள் ஒரு பெண் போராளி

பயங்கரவாதத்தின் முடிவை எனக் கொக்கரித்தான் ஒரு அமைச்சன்

பைத்தியக்கராத்தனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி

பசியில் வாடும் குழந்தைகளை எனப் பதறினாள் ஒரு தாய்

பால்க்கான கியூ வரிசையாய் என்றாள் ஒரு சிறுமி


போக முடியாத சாலைகளை என முறையிட்டான்

ஒரு வாடகை வண்டியோட்டி

வெறித்தான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்


திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டாள் ஒரு ஆசிரியை

நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்

நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி


மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்

மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்.ஜி.ஒ ஊழியன்


எராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்


என்னை என்ற குரல் வந்த திசையில்

கவனிப்பாரற்று கிடந்தது


ஒரு அகதியின் பிணம்!!!!!!!!!!!!!

2 கருத்துகள்:

யோகா.சு. சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்!நெஞ்சைத் தொடுகிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

இவற்றைக் கடந்து போகாமல் இருப்பை மட்டும் நிலைநாட்டிக்கொள்ள மட்டும் இந்தப் பின்னூட்டம்.