30 மார்ச், 2011

கர வருட இராசி பலன்கள் - சித்திரை 2011 - 2 வது தொடர்ச்சி

கடகம்


புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

பொறுமைசாலிகள் நீங்கள். உங்களது ராசிக்கு தன வீடான 2-ல், கர புத்தாண்டு பிறப்பதால், பேசியே காரியம் சாதிப்பீர்கள். அலட்சியப்போக்கு மாறும். 8.5.11 வரை 9-ஆம் வீட்டில் குரு இருப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழைய கடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். 9.5.11 முதல் குரு 10-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் வீண் பழி, கௌரவக் குறைவு, உத்தியோகத்தில் வேலைப்பளு, இடமாற்றம் வரக்கூடும். சித்திரை, வைகாசி மாதங்களில் திருமணம் கூடி வரும். வருமானம் உயரும். ஆனி, ஆடி மாதங்களில் திடீர் செலவும், அலைச்சலால் உடல்நிலை பாதிப்பும் ஏற்படலாம்.

புத்தாண்டு பிறக்கும்போது கேது 12-ஆம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ஆம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. 16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. சொத்துச் சிக்கல்கள் பேச்சு வார்த்தைகளால் சரியாகும். 16.5.11 முதல் ராகு 5-ஆம் வீட்டுக்குள் வருவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் வரக்கூடும். சொந்தபந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். சிலர் வீடு- இடமாற்றம் செய்வார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

20.12.11 வரை சனி பகவான் 3-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால் சொத்துச் சேர்க்கை, பெரிய பதவிகள் கைகூடும். பிரபலங்களது நட்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வெளிநாடு சென்று வருவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 21.12.11 முதல் சனி 4-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். வாகனம் பழுதாகும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அரசு வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். எவருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபடவேண்டாம். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்த்துவிடுங்கள்.

குடும்ப ரகசியங்களை வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

10.9.11 முதல் 3.11.11 வரை பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். நீங்களும் சோர்வாகக் காணப்படுவீர்கள். கார்த்திகை, தை, மாசி மாதங் களில் சில சவால்களைச் சந்திப்பீர்கள்.

கலைஞர்களே, சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு.

கன்னிப் பெண்களே, உயர்கல்வியில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். மாணவர் கள், படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. கணிதம், மொழிப் பாடங்களில் அதிகக் கவனம் தேவை.

வியாபாரம்: வைகாசி, ஆவணி மாதங்களில் சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும் முயற்சிப்பீர்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாட்களிடம் கண்டிப்பு வேண்டாம். எவருக்கும் அதிக முன்பணம் தரவேண்டாம். மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். கூட்டுத்தொழிலில் பிணக்குகள் விலகும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகம்: உங்களைப் பற்றி அவதூறாக கடிதங்கள் வரக்கூடும். ஆடி மாதம், உங்களுக்கு ஆதரவான உயர் அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படலாம். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பளம் உயரும்.

கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். புது வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அவசரம் வேண்டாம்.

மொத்தத்தில் 'கர’ புத்தாண்டு, வெள்ளந்தியான உங்களுக்கு, சந்தர்ப்பச் சூழலுக்கு ஏற்றாற்போல் பேசும் யுக்தியைக் கற்றுத் தருவதாக அமையும்.

சிம்மம்


மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்

கொடுக்கும் குணம் கொண்டவர் நீங்கள். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கர புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். கல்யாணத் தடைகள் நீங்கும். பழைய வாகனத்தை மாற்று வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். வீண் செலவுகளையும் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களை அனுசரித்துச் செயல்படுங்கள்.

கேது 11-ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தயக்கம் - தடுமாற்றங்கள் நீங்கும். ஆன்மிகவாதிகள் அறிமுகமாவர். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தாருடன் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. குறிப்பாக மக நட்சத்திரக்காரர்கள், அவ்வப்போது சர்க்கரை, கொழுப்பு அளவைப் பரிசோதிப்பது நல்லது. 15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை, டென்ஷன் வரக்கூடும்.

9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் திடீர் பண வரவு, யோகம், குடும்பத்தில் சந்தோஷம், குழந்தை பாக்கியம் எல்லாம் உண்டு. வீடு-மனை சேர்க்கையுண்டு. சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். மகனுக்கு நல்ல வரன் அமையும். வைகாசி, ஆனி மாதங்களில் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தை, பங்குனி மாதங்களில் வி.ஐ.பி-கள் உதவுவர். தங்க நகைகள், புதிய சொத்துகள் சேரும்.

16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். தாயாருடன் மனஸ்தாபம் வெடிக்கும். 16.5.11 முதல் கேது 10-ஆம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், வேலைச்சுமை, அதிருப்தி வந்து நீங்கும்.

4.11.11 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீடிப்பதால், சகோதரர்களுடன் சச்சரவுகள் வரும். வீடு- மனை தொடர்பான வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். கார்த்திகை, தை மாதங்களில் திடீர் திருப்பங்கள், பண வரவு உண்டு. வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். மார்கழியில் சிறு விபத்துகள் நிகழலாம். 20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால் கால் வலி, உடல் அசதி வந்து நீங்கும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 21.12.11 முதல் 3-ஆம் வீட்டுக்குள் சனி நுழைவதால் எதிலும் வெற்றியுண்டு. மதிப்பு கூடும். புது வீட்டில் குடி புகுவீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், விமர்சனத்தைத் தவிர்க்கவும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

வியாபாரம்: வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு. பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். பணியாட்கள், வேலையை கச்சிதமாக முடிப்பார்கள். தை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். மார்கழி, மாசி மாதங்களில் போட்டிகள் அதிகரிக்கும். சிமென்ட், இரும்பு, கடல் உணவு, ரசாயன வகைகள் லாபம் தரும்.

உத்தியோகம்: வேலையில் ஆர்வம் பிறக்கும். ஆனி மாதம், வெளி நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்ப்பாதையில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். கார்த்திகை, தை மாதங்களில் பொறுப்புகள் தேடி வரும். கணினித் துறையினருக்கு வேலை அதிகமானாலும் ஊதிய உயர்வும் உண்டு.

கலைஞர்களுக்கு, பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கேற்ற கணவன் அமைவார். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்கவேண்டாம். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். உயர் கல்வியில் வெற்றியுண்டு.

மொத்தத்தில் கர புத்தாண்டு, உடல் உபாதைகளைத் தந்தாலும்... பணப்புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.


கன்னி


உத்திரம் 2,3,4ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம்

வெள்ளையுள்ளம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கர புத்தாண்டு பிறப்பதால் மனத் தெளிவு, பிரபலங்களின் நட்பு கிடைக்கும். 7-ல் குரு நிற்பதால், குடும்பத்தில் நன்மைகள், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய விரய ராசியில் புத்தாண்டு பிறப்பதால், அவ்வப்போது கடன் வாங்கும் சூழல் அமையலாம். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், செலவுகள் அதிகரிக்கும். காரியத்தடை, அலைச்சல், டென்ஷன் இருக்கத்தான் செய்யும். ஆனால், குரு உங்களின் 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணப் புழக்கமும் உண்டு. சொத்துச் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்களும் பணத்தைத் திருப்பித் தருவார்கள்.

வருடம் பிறக்கும்போது 6-ஆம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வாகன விபத்தும் வரக்கூடும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினரிடையே பகைமை ஏற்படலாம். கேது 10-ல் நிற்பதால்

வேலையில் டென்ஷன், காரியத்தடைகள் வரும். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவ தால் எதிலும் வெற்றியே. புதிய முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடனுதவியுடன் வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். கேது 9-ஆம் வீட்டுக்குள் நுழைவதால், உத்தியோகப் பிரச்னைகள் குறையும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வீட்டில் கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

20.12.11 வரை ஜென்மச்சனி தொடர்வதால் ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். லாகிரி வஸ்துகளைத் தவிர்ப்பது நல்லது. எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 21.12.11 முதல், சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் கூடும்; தாழ்வு மனப்பான்மை விலகும். திடீர் யோகம், பண வரவு எல்லாம் உண்டு. ஆன்மிக பயணத்தால் மன நிம்மதி கிட்டும்.

பிரபலங்களின் நட்பால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். கௌரவப் பதவி கிடைக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வழக்குகளில் தேக்க நிலை மாறும்.

கன்னிப் பெண்களுக்கு ஆவணி, கார்த்திகை மாதங்களில் கல்யாணம் கூடிவரும். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

வியாபாரம்: ஆவணி, புரட்டாசி மாதங்கள் போராட்டமாக இருக்கும். ஆனி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய யுக்திகளால், பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வாடிக்கையாளர்களது எண்ணிக்கை உயரும். பணியாட்களிடம் கறாராக இருங்கள்.

மாசி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் ஆதாயம் பெருகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.

உத்தியோகம்: சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனி மற்றும் மாசி மாதத்தில் பணியில் உயர்வு உண்டு. உங்களைத் தரக் குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களுடைய சம்பள உயர்வுக்காகவும் போராடுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு தேடி வரும்.

கணினித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

கலைஞர்களே, உங்களைக் குறித்து வீண் வதந்திகள் கிளம்பும். என்றாலும் சோதனைகளைக் கடந்து எல்லாவற்றிலும் சாதித்துக் காட்டுவீர்கள்.

மொத்தத்தில் இந்த கர புத்தாண்டு, செலவுகளாலும் பயணங்களாலும் உங்களை அலைக்கழித்தாலும், பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக்கொடுப்பதாக அமையும்.

நன்றி : சக்தி விகடன்

"ஜோதிட ரத்னா" கே.பி.வித்யாதரன்

கருத்துகள் இல்லை: